Thiruppugazh aindhu boodhamum

ஐந்து பூதமும் (விராலிமலை)

முருகா!குரு சம்பிரதாயத்துடன் பொருந்தும் நெறியை அருள்


தந்த தானன தான தனதன 
தந்த தானன தான தனதன
தந்த தானன தான தனதன ...... தனதான


பாடல்

ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்

தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி

வன்கண் வீரிபி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா

வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்

விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

ஐந்து பூதமும், ஆறு சமயமும்,
மந்த்ர வேத புராண கலைகளும்,
ஐம்பது ஓர் விதம் ஆன லிபிகளும், ...... வெகுரூப

அண்டர் ஆதி சராசரமும், உயர்
புண்ட ரீகனும், மேக நிறவனும்,
அந்தி போல் உரு வானும், நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமும், அசபையும்
விந்து நாதமும், ஏக வடிவம்,
அதன் சொரூபம் அது ஆக உறைவது ...... சிவயோகம்,

தங்கள் ஆணவ மாயை கரும
மலங்கள் போய், உபதேச குருபர
சம்ப்ரதாயமொடு ஏயும் நெறி அது ...... பெறுவேனோ?

வந்த தானவர் சேனை கெடி புக,
இந்த்ர லோகம் விபுதர் குடி புக,
மண்டு பூத பசாசு பசிகெட, ...... மயிட அரி,

வன்கண் வீரி, பிடாரி ஹரஹர,
சங்கரா என, மேரு கிரிதலை
மண்டு தூள் எழ வேலை உருவிய ...... வயலூரா!

வெந்த நீறு அணி வேணி இருடிகள்,
பந்த பாச விகார பரவச
வென்றி ஆன சமாதி முறுகு கல் ...... முழைகூடும்

விண்டு மேல் மயில் ஆட, இனிய கள்
உண்டு கார் அளி பாட, இதழி பொன்
விஞ்ச வீசு, விராலி மலைஉறை ...... பெருமாளே

Comments